இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இதற்கடுத்து 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரினை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தற்போது பிசிசிஐ-யானது மிகுந்த கவனத்துடன் அணி வீரர்களை தேர்வு செய்து வருகிறது. 

Advertisement

இந்நிலையில் ஒருநாள் உலககோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை கட்டமைத்து டி20 அணியை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, கேஎல் ராகுல் போன்ற எந்த சீனியர் வீரரும் இல்லாமல் தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே அடுத்தடுத்து டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

அந்த வகையில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி20 தொடரிலும் பங்கேற்க இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக 6 டி20 போட்டிகள் மட்டுமே இந்திய அணிக்கு எஞ்சியிருப்பதினால் இந்த அணித்தேர்வு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்த ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சிஎஸ்கே அணியை சேர்ந்த ஷிவம் தூபேவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தாலும் எந்த ஒரு போட்டியிலும் அவர் களமிறங்காதது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வகையில் ஷிவம் தூபே தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “இந்திய அணியின் தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகள் ஆச்சரியப்பட வைக்கிறது. ஏனெனில் நமது அணியில் தற்போது ஹார்திக் பாண்டியா இல்லாத வேளையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் தூபேவை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இந்த தொடரில் அவர் ஏன் சேர்க்கப்படவில்லை என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் கான் கூறுகையில், “நமது அணியில் தற்போதுள்ள ஆல்ரவுண்டர்களின் வரிசையில் ஷிவம் தூபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அவரால் அணியில் நீடித்திருக்க முடியும்” என கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News