இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் அனலாக பந்துவீசி 110 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

Advertisement

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து கடந்த போட்டியை போல் மளமளவென விக்கெட்டுகளை இழக்கவில்லை என்றாலும் இம்முறையும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு அவுட்டானது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 23 (33), ஜானி பேர்ஸ்டோ 38 (38) பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் ஜோ ரூட் 11 (21) கேப்டன் ஜோஸ் பட்லர் 4 (5) பென் ஸ்டோக்ஸ் 21 (23) லியாம் லிவிங்ஸ்டன் 33 (33) என முக்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

Advertisement

அதனால் 200 ரன்களை தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட தங்களது அணியை 7-வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் ஜோடி சேர்ந்து 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மொயின் அலி 47 (64) ரன்களும் டேவிட் வில்லி 41 (49) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினார்கள். அற்புதமாக பந்துவீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 247 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியா அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்துக்கு பதில் சொல்ல முடியாமல் 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு சுருண்டது.

ரோஹித் சர்மா 0, ஷிகர் தவான் 9, ரிஷப் பண்ட் 0, விராட் கோலி 16 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 31/4 என மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவை காப்பாற்ற முயன்ற சூர்யகுமார் யாதவ் 27, ஹர்திக் பாண்டியா 29, ரவீந்திர ஜடேஜா 29 என அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் ஆட்டமிழந்து தோல்வியை உறுதி செய்தனர். அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இங்கிலாந்து தக்க பதிலடி கொடுத்துள்ளது.

முன்னதாக இப்போட்டியில் காயமடைந்து திரும்பிய விராட் கோலி சதமடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் வழக்கம்போல 3 பவுண்டரியுடன் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தை இழுத்தடிக்க முயன்று 16 ரன்களில் அவுட்டானார். ஏற்கனவே சர்வதேச அரங்கில் தனது அபார திறமையால் ரன் மெஷின் போல ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் விளாசி இந்தியாவுக்கு பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் கடந்த 2019க்குப்பின் அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.

ஆனால் பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் ரன்கள் அடிக்காமல் அணியில் காலத்தை தள்ளுவீர்கள் என்ற வகையில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உட்பட பலரும் அவரை அணியில் இருந்து நீக்குமாறு போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இருப்பினும் அவரின் திறமையையும் அருமையையும் உணர்ந்த நிறைய வெளிநாட்டவர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

Advertisement

அந்த வரிசையில் விராட் கோலியும் மனிதர்தான் என்று தெரிவிக்கும் இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் அவரை நீக்குவதற்கு முன்பாக ஏற்கனவே செய்துள்ள சாதனைகளையும் பெற்று கொடுத்துள்ள வெற்றிகளையும் நினைத்து பார்க்குமாறு கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் பேசிய அவர், “எதிரணியாக இருந்தாலும் விராட் கோலியும் ஒரு மனிதர் என்ற வகையில் ஒருசில குறைவான ஸ்கோரை பதிவு செய்துள்ளது சிறிய வழியில் எங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. ஆனால் அவர் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தார். இப்போதும் சிறந்த வீரர் தான். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டின் பல வருடங்களாக உலகின் அற்புதமான வீரராக அவர் இருந்தார். எனவே அனைத்து பேட்ஸ்மேன்களும் சில சமயங்களில் தங்களால் சிறப்பாக செயல்பட முடியாத தருணங்களை இது காட்டுகிறது

அவரைப்போன்ற க்ளாஸ் பேட்ஸ்மேன் எப்போது வேண்டுமானாலும் ரன்களை அடிக்க முடியும் என்று தெரியும். ஆனால் எதிரணியின் கேப்டனாக அந்தப் பெரிய ஸ்கோர் எங்களுக்கு எதிராக வரக்கூடாது என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். இருப்பினும் நீங்கள் எழுப்பும் கேள்விகள் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் நீங்கள் கூறியது போல் அவரின் சாதனைகளே அவரைப் பற்றி பேசும். இந்தியாவுக்காக நிறைய போட்டிகளை வென்று கொடுத்த அவரைப் பற்றி நீங்கள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News