இந்தியாவில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை - ஆலன் டொனால்ட் அறிவுரை!

Updated: Sat, Jan 20 2024 15:07 IST
இந்தியாவில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை - ஆலன் டொனால்ட் அறிவுரை! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அதில் தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போடும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஆனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 கிரிக்கெட்டை போல டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து இம்முறை இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இந்நிலையில் இத்தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேவையான சில ஆலோசனைகளை தென்னாபிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆலன் டொனால்ட் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர்,  “முதலில் புதிய பந்தை கொண்டு வீசும் முதல் 25 – 30 ஓவர்களின் முக்கியத்துவத்தை பற்றி நாங்கள் பேசுவோம். அந்த ஓவர்களில் எப்போதும் உங்களுடைய லென்த் கொஞ்சம் ஃபுல்லராக இருந்து ஸ்டம்பை அட்டாக் செய்வதாக இருக்க வேண்டும். அப்போது நேராக ஃபீல்டர்களை நிறுத்த வேண்டும். ஏனெனில் பிட்ச்சில் நமக்கு எந்த கேரியும் கிடைக்காது என்பதை நாம் அறிவோம். 

எனவே அனைத்து பந்தையும் ஸ்டம்ப் நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். ஒருவேளை லேசான ஸ்விங் கிடைத்தால் நமக்கு கிடைக்கும் சிறிய நேரத்தில் அதை மட்டுமே நாம் செய்ய வேண்டும். புதிய பந்தை தாண்டி நாம் சென்ற பின் எதிர்மறையான ஃபீல்டை செட்டிங் செய்யக் கூடாது. தேவைப்பட்டால் மட்டும் மிட் விக்கெட் மற்றும் கவர்ஸ் திசையில் எக்ஸ்ட்ரா ஃபீல்டரை நிறுத்தலாம்.

பயிற்சியாளர்களாக நாங்கள் எப்போதும் நேராக பந்து வீசுங்கள் என்றே பவுலர்களிடம் சொல்வோம். மேலும் புதிய பந்தில் ஆஃப் ஸ்டம்ப்பில் எங்களுடைய பெரும்பாலான பந்துகளை பார்க் செய்ய நினைப்போம். எங்களுடைய காலத்தில் கூட சச்சின் டெண்டுல்கர் களத்தில் இருக்கும் போது நாங்கள் அவரை தாண்டி செல்ல முயற்சிப்போம். குறிப்பாக ரன்கள் கொடுப்பதை பற்றி கவலைப்படாமல் அவரை அட்டாக் செய்ய முயற்சிப்போம்.

இந்தியாவில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக பேட்ஸ்மேன்களின் பார்ட்னர்ஷிப் பெரிதாகும் போது பந்து பழையதாக மாறி கொஞ்சமும் ஸ்விங் ஆகாது. அது வேகப்பந்து வீச்சாளர்களை மனதளவில் சோதிக்கும். ஆனால் நாங்கள் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பவுலர்களை தேர்ந்தெடுப்போம். எனவே குறுகிய நேரத்தில் வேகமாக பந்து வீசக்கூடியவர்கள் ஸ்பின்னர்களின் உதவியுடன் சில விக்கெட்டுகளை எடுக்கலாம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை