இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி துவக்க வீரராக இருந்து வந்த முரளி விஜய் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

2019 ஆம் ஆண்டு ரஞ்சிக்கோப்பையில் கடைசியாக விளையாடினார். அதன்பின் 2021 ஆம் ஆண்டு சையது முஸ்தக் அலி டி20 தொடரில் தமிழக அணிக்காக விளையாடியதுடன் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடுவதை நிறுத்திவிட்டார். மேலும் அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட நான்காயிரம் ரன்களும், தமிழக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களும் அவர் அடித்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டெஸ்ட் தொடரில் மறக்க முடியாத ஆட்டத்தை தொடக்க வீரராக வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் விராட் கோலி மோசமாக விளையாடினார் என்று பேசப்பட்டதே தவிர, முரளி விஜய் அபாரமாக செயல்பட்டது பேசப்படவில்லை.

தொடக்க வீரராக களமிறங்கி 5 போட்டிகளில் 1,000க்கும் மேற்பட்ட பந்துகளை பிடித்து, கணிசமான ரன்களையும் அடித்து இந்தியாவை படுதோல்வியில் இருந்து மீட்டார். அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இடம் கிடைத்து வந்தது. 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து வாய்ப்புகள் வருவதில்லை. இதன் காரணமாக மனமுடைந்து பேசியிருக்கிறார் முரளி விஜய்.

இதுகுறித்து பேசிய அவர், “பிசிசிஐ வாய்ப்புக்காக காத்திருந்து நான் வெறுத்து விட்டேன். இனி வெளிநாடுகளில் ஏதேனும் வாய்ப்புகள் கிடைக்குமா என்பது குறித்து விசாரித்து வருகிறேன். 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் எங்களுக்கு ஏதோ 80 வயது ஆகிவிட்டது போல நினைக்கிறார்கள். சர்வதேச போட்டிகளில் பல ஜாம்பவான்கள் 30 வயதிற்கு மேல் தான் தங்களது உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். 

வீரரின் மனநிலை மற்றும் உடல்நிலை இரண்டும் முக்கியம். அதை மட்டுமே கவனிக்க வேண்டுமே தவிர வயது என்பது இரண்டாம் பட்சம் தான். கிரிக்கெட் குறித்து வெறுப்பு அடைந்து விட்டேன். இனி நம் கையில் இருக்கும் வாய்ப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும் என முடிவு செய்து, வெளிநாடுகளில் ஒரு சில வாய்ப்புகள் வருகிறது. என்னால் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் நன்றாக விளையாட முடியும். ஆகையால் அந்த வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News