ஐபிஎல் 16ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மிகவும் பரபரப்பாக கடைசி பந்து வரை சென்று ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. இந்தப் போட்டியில் கடைசி ஒரு பந்துக்கு ஒரு ரன் லக்னோ அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அந்த ஓவரை ஹர்சல் படேல் வீச, ஆவேஷ் கான் எதிர்கொண்டார். பந்துவீச்சாளர் முனையில் ரவி பிஷ்னோய் இருந்தார்.

Advertisement

பந்து வீச்சாளர் பந்தை வீசி முடிப்பதற்கு முன்பாகவே பந்துவீச்சு முனையில் நின்ற பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் சுதாரித்து பந்துவீச்சாளர் ஹர்ஷல் ரன் அவுட் செய்ய முயல, அந்த முயற்சி தோல்வியில் முடிந்து, மீண்டும் வீசப்பட்ட பந்தில் லக்னோ அணி, கீப்பர் தவறவிட்டதன் மூலம் ஒரு ரன் எடுத்து ஜெயித்தது.

Advertisement

இப்படியான ரன் அவுட் ஆரம்பத்தில் மன்கட்டிங் ரன் அவுட் என்று அழைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் இந்திய வீரர் வினு மன்கட் இப்படியான ரன் அவுட்டை செய்ததால் இந்த பெயர் நின்றது. மேலும் இப்படியான ரன் அவுட் ஆட்டத்தின் உத்வேகத்தை குறைப்பது என்கின்ற கருத்தும் இருந்தது.

இதனால் இப்படியான ரன் அவுட்டை யாரும் செய்ய முன்வர மாட்டார்கள். அதே சமயத்தில் பேட்ஸ்மேன்கள் தங்களது இஷ்டத்துக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி நேரத்தில்தான் இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் இப்படியான ரன் அவுட்டை தைரியமாக செய்தார். 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அஸ்வின் ராஜஸ்தான் அணியின் வீரர் பட்லரின் விக்கட்டை இப்படி வீழ்த்தினார். அது அப்போது பெரிய சர்ச்சையானது.

இதற்குப் பிறகு சமீபத்தில் எம்சிஜி கிரிக்கெட் விதிகளில் இப்படியான மன்கட்டிங் என்று அழைக்கப்பட்ட ஆட்ட இழப்பு முறையை ரன் அவுட் என்று திருத்தி, இது சட்ட விதிகளுக்குள் இருப்பதுதான் அதனால் இதை யாரும் செய்யலாம் இது தவறில்லை என்று கூறியது. அதற்கு முன்புமே தவறு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் வீரர்களிடம் இதற்கு இப்பொழுதும் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது.

எவ்வளவு எதிர்ப்புகள் இது குறித்து வெளியிலிருந்து வந்தாலும் அஸ்வின் இந்த ரன் அவுட் செய்வதில் எப்பொழுதும் உறுதியாகவே இருந்தார். மேலும் இதில் எந்த தவறும் கிடையாது என்பதற்கு அவர் சரியான நியாயங்களை சொல்லி வாதாடவும் செய்தார்.

Advertisement

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வினிடம் கேட்கப்பட்ட பொழுது, அதற்கு அவர், “ஒரு பந்துக்கு ஒரு ரன் வெற்றிக்கு தேவை. எப்படியும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியே ஓடுவார் என்பது நன்றாகவே தெரியும். நான் இப்படியான எல்லா நேரத்திலும் ரன்னை தடுப்பதோடு பேட்ஸ்மேனையும் ரன் அவுட் செய்யவே பார்ப்பேன். நான் இதில் எந்த பிரச்சனையும் இருப்பதாக பார்க்கவில்லை. 

நான் இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பொழுது எனது மனைவியிடம் அவர் நிச்சயமாக ரன் அவுட் செய்வார் என்று சொன்னேன். அப்படியே அவரும் செய்தார். எனக்கு ஒரு பந்துவீச்சாளர் இப்படி தைரியமாக அந்த நேரத்தில் ரன் அவுட் செய்யப்போனதில் மகிழ்ச்சி. மேலும் நிறைய பந்துவீச்சாளர்கள் இதைச் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News