இணையத்தில் வைரலாகும் மிட்செல் மார்ஷின் உலகக்கோப்பை கணிப்பு!

Updated: Fri, Nov 17 2023 13:37 IST
இணையத்தில் வைரலாகும் மிட்செல் மார்ஷின் உலகக்கோப்பை கணிப்பு! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அஹ்மதாபாத் நகரில் நடைபெறுகிறது. இதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி கொண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய உலகின் டாப் 2 அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதில் ஆஸ்திரேலியா ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான திகழ்வதுடன் நாக் அவுட் போட்டிகளில் சொதப்பாமல் இந்தியாவை விட அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக இதுவரை வரலாற்றில் 7 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ள அந்த அணி 5 கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் இத்தொடரின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட அந்த அணி அரையிறுதிச்சுற்றுக்கு வராது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதன் பின் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றுள்ள அந்த அணி அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து தற்போது இந்தியாவை சந்திக்க உள்ளது. மறுபுறம் இத்தொடரில் சொந்த மண்ணில் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா இப்போட்டியிலும் வெல்வதற்கு போராட உள்ளது.

இந்நிலையில் 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 450/2 ரன்கள் அடித்து இந்தியாவை 65க்கு சுருட்டி வெல்வோம் என்று ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய போது ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் மார்ஷ் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. ஏனெனில் அவர் சொன்னது போலவே தற்போது இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதுகின்றன. 

இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்திக்காத அணியாக தொடர்ந்து இருக்கும். குறிப்பாக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 450/2 ரன்கள் அடித்து பின்னர் இந்தியாவை 65 ரன்களுக்கு ஆல் அவுட் செய்யும்” என்று கூறியிருந்தார். அதாவது 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 369/2 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டி கோப்பையை வென்றது.

இம்முறை அதை விட சிறப்பாக விளையாடி 65 ரன்களுக்கு சுருட்டி உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவிடம் தோற்காத தங்களுடைய வெற்றி நடையை தொடர்வோம் என்று மார்ஷ் தெரிவித்திருந்தார். இருப்பினும் லீக் சுற்றில் வெறும் 199 ரன்களை சேசிங் செய்கையில் 2/3 என சரிந்தும் ராகுல் மற்றும் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் வென்ற இந்தியா 2023 உலகக்கோப்பையில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக மிரட்டி வருகிறது.

எனவே 2003 இறுதிப்போட்டி, 2015 அரையிறுதிப்போட்டி மற்றும் 2023 சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆகிய தோல்விகளுக்கு இம்முறை ஆஸ்திரேலியாவை தோற்கடித்து பழி தீர்த்து மார்ஷ் கணிப்பை இந்தியா பொய்யாக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை