வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது.
அதன்படி இன்று நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் 8 ரன்களுக்கும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 16 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான், கரிம் ஜானத் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய முகமது நபி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தா, மறுபக்கம் நஜிபுல்லா ஸத்ரான் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஸஸாயும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 4 சிக்சர்களை விளாசி 33 ரன்களைச் சேர்த்திருந்த அஸ்மதுல்லா விக்கெட்டை இழந்தார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது நபி அரைசதம் கடந்ததுடன், 54 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.