வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் அனமுல் ஹக்கை 11 ரன்னிலும், கேப்டன் லிட்டன் தாஸை 7 ரன்களிலும் முகமது சிராஜ் அடுத்தடுத்து வெளியேற்றினார். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவை உம்ரான் மாலிக் தனது அசுரவேகப்பந்து வீச்சால் க்ளீன் போல்டாக்கி வழியனுப்பி வைத்தார்.

அதன்பின் ஷாகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹிம், அஃபிஃப் ஹொசைன் ஆகியோரது விக்கெட்டுகளை வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து கைப்பற்றி, வங்கதேச அணி 69 ரன்களுக்குள்ளாகவே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 100 ரன்களில் வங்கதேச அணி ஆல் அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த மஹ்மதுல்லா - மெஹிதி ஹசன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக்கொண்டனர். அதிலும் ஒரு கட்டத்தில் பவுண்டரிகளை விளாசத் தொடங்கிய இந்த இணை, 100 ரன்களையும் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடவைத்தனர்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் யாரும் எதிர்பாராத வகையில் 200 ரன்களைத் தாண்டியது. அதன்பின் 77 ரன்களில் மஹ்முதுல்லா ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த மெஹிதி ஹசன் தொடர்ந்து பவுண்டரிகளை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

Advertisement

இதன்மூலம் 83 பந்துகளில் மெஹிதி ஹசன் மிராஸ் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதில் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளும் அடங்கும். இதன்மூலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்களைச் சேர்த்தது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெஹிதி ஹசன் 100 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News