PAK vs BAN, 1st Test: சதமடித்து அசத்திய முஷ்ஃபிக்கூர் ரஹீம்; முன்னிலை நோக்கி வங்கதேசம்!

Updated: Sat, Aug 24 2024 13:07 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது. 

இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர்.  வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் வீரர்கல் ஜாகிர் ஹசன், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த சாத்மன் இஸ்லாம் - மொமினுல் ஹக் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் இருவரும் அரைசதம் கடந்திருந்த நிலையில் மொமினுல் ஹக் 50 ரன்களிலும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாத்மான் இஸ்லாம் 93 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 15 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் மற்றும் லிட்டன் தாஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 316 ரன்களைச் சேர்த்து முன்னிலை நோக்கி நகர்ந்து வருகிறது. 

இதனையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை முஷ்ஃபிக்கூர் ரஹிம் 55 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 52 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் லிட்டன் தாஸ் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 11ஆவது சதத்தை பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் வங்கதேச அணியானது நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களை எடுத்துள்ளது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதில் முஷ்ஃபிக்கூர் ரஹீம் 101 ரன்களுடனும், மெஹிதி ஹசன் மிராஸ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா மற்றும் குர்ராம் ஷஸாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது அலி மற்றும் சைம் அயூப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளனர். இதனையடுத்து வங்கதேச அணியானது 59 ரன்கள் பின் தங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை