கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, இந்திய அணியின் அப்போதைய கேப்டனாக இருந்த விராட் கோலி அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன் என்று அதிர்ச்சிகொடுத்தார். அதன் பிறகு அணியின் மூத்த வீரராகவும் ஐபிஎல் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் நன்றாக செயல்பட்டவராகவும் இருந்த ரோகித் சர்மா மூன்றுவித போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

Advertisement

இவர் தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் தோல்வியை தழுவியது, பின்னர் சர்வதேச டி20 உலககோப்பையில் அரையிறுதி வரை சென்று இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வியை சந்தித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பெறமுடியாமல் வெளியேறியுள்ளது.

Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் செயல்பட்ட விதம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுக்காமல் பந்துவீச்சு எடுத்தது. அதன் பிறகு நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் மற்றும் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிளேயிங் லெவனில் எடுக்கப்படாதது, அணியின் தொடக்க வீரராகவும் கேப்டன் பொறுப்பிலும் இருக்கும் ரோஹித் சர்மா பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டது என அனைத்திற்கும் விமர்சனங்கள் அதிக அளவில் வருகின்றன.

குறிப்பாக சில தரப்பினர் ரோஹித் சர்மா தனது கேப்டன் பொறுப்பை விட்டு விலகவேண்டும். 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியபோது விராட் கோலி முதல் டெஸ்ட் மட்டும் விளையாடிவிட்டு நாடு திரும்பினார். மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பேற்று விளையாடி அணிக்காக பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று கொடுத்தார் ரஹானே. ஆகையால் அவர்தான் அடுத்த கேப்டனாக வரவேண்டும் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிளில் இந்தியா விளையாடுகிறது. இதற்கான தேதி மற்றும் இடம் ஆகியவை அறிவிக்கப்பட்டுவிட்டது. வீரர்களுக்கான பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருப்பதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக, ரோஹித் சர்மா தனது எதிர்கால டெஸ்ட் கேப்டன்ஷிப் குறித்து பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருப்பார். அதன் பிறகு அவரது கேப்டன் பொறுப்பு பற்றி பேசலாம் என்று பிசிசிஐ அதிகாரிகள் ரோகித் சர்மாவிற்கு கூறியுள்ளனர்.

Advertisement

இதிலிருந்து ரோகித் சர்மா டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து விலகும் மனநிலையில் இருக்கிறார் தெரிகிறது. அடுத்து வரவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் முழு கவனம் செலுத்துவதற்காக ரோஹித் சர்மா இத்தகைய முடிவுகளை எடுத்திருக்கலாம் என்று பேச்சுக்கள் அடிப்படுகின்றன.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News