ரோஹித் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து - சைமா முகமதுக்கு பிசிசிஐ செயலாளர் கண்டனம்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகாளை குவித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறிய சர்ச்சைகுறிய கருத்தானது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பதிவில் "ரோஹித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக, இந்தியா இதுவரை கண்டதிலேயே மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகியதுடன், அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்களும் எழுந்தன இதனையடுத்து ரோஹித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து அவர் நீக்கினார். இருப்பினும் அப்பதிவை நகல் எடுத்திருந்த நபர்கள், மீண்டும் பதிவிட்டு அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “ஒரு முக்கியமான ஐசிசி தொடரின் நடுவில் அணி இருக்கும்போது, ஒரு பொறுப்பான பதவியில் உள்ள நபர் இதுபோன்ற ஒரு அற்பமான கருத்தை வெளியிடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது ஒரு தனிநபருக்கோ அல்லது அணிக்கோ மன உறுதியை இழக்கச் செய்யும் செயலாகும். அனைத்து வீரர்களும் தங்கள் அதிகபட்ச திறனை வெளிப்படுத்தி வருகின்றனர், மேலும் அவர்களின் பலன்கள் தெளிவாகத் தெரிகின்றன.
Also Read: Funding To Save Test Cricket
தேசிய நலனை விலையாகக் கொடுத்து, தனிப்பட்ட விளம்பரத்திற்காக இதுபோன்ற இழிவான அறிக்கைகளை வெளியிடுவதை தனிநபர்கள் தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். முன்னதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, “இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். விளையாட்டு வீரர்கள் குறித்த தனிப்பட்ட நபர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கத்தேவையில்லை” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.