இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்குபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மொகாலியில் நடைபெற உள்ள நிலையில் 2ஆவது போட்டி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது.

Advertisement

இந்த டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் முக்கிய அம்சமாக சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதில் புதிய டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்பட சமீப காலங்களாக சதம் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வந்த புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் அந்த அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Advertisement

அதேபோல் இந்திய அணியில் நீண்ட காலமாக விளையாடி வந்த அனுபவ விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா மற்றும் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரும் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்கள். சமீப காலங்களாக நல்ல பார்மில் இல்லாத காரணத்தாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து விட்டதாலும் இவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

குறிப்பாக இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் பங்கேற்று அதில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இனிமேல் எந்த ஒரு தொடருக்கான இந்திய அணியிலும் இடமில்லை என இந்திய தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா வெளிப்படையாகவே தெரிவித்தது மன வேதனையை அளித்ததாக கடந்த வாரம் சஹா தெரிவித்திருந்தார்.

அத்துடன் அதே காரணத்துக்காக இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் போதே கௌரவத்துடன் ஓய்வுபெறும் முடிவு பற்றி சிந்திக்குமாறு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்ததாகவும் சகா வருத்தத்துடன் கூறியிருந்தார். அந்த வேளையில் இதுபற்றி விரிவான விவரங்களை பேட்டியாக எடுக்க இந்தியாவைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் தம்மைத் தொடர்பு கொண்டதாக தெரிவித்த சகா அதற்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் அவர் கோபத்தில் தன்னை மிரட்டியதாக பகிரங்க குற்றச்சாட்டு எழுப்பினார். 

அதற்கு ஆதாரமாக அந்த மூத்த பத்திரிக்கையாளர் தம்முடன் பேசிய உரையாடல்களை பெயரை குறிப்பிடாமல் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்தியாவுக்காக விளையாடிய ஒரு கிரிக்கெட் வீரரை ஒரு சாதாரண பத்திரிக்கையாளர் இப்படி மிரட்டும் அளவுக்கு பேசியது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்தது. 

Advertisement

அதைப் பார்த்த வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் அந்த பத்திரிகையாளரின் பெயரை குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டபோதும் அவர் அதை செய்யவில்லை. மொத்தத்தில் கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்சனையால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு மிகப் பெரிய சலசலப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் சஹாவை மிரட்டியது யார் என்பது பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது. இதுபற்றி பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். “இந்திய கிரிக்கெட் வீரர் சகாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய மூத்த இந்திய பத்திரிகையாளர் யார் என்பதைப் பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது. இந்த குழுவில் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ பொருளாளர் அர்ஜுன் துமல், பிசிசிஐ தலைமை கூட்ட நிர்வாகி ப்ராபிட்ஜ் சிங் பாட்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். இவர்கள் இந்த விசாரணையை வரும் வாரங்களில் துவங்க உள்ளார்கள்” என தெரிவித்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News