மான்செஸ்டர் டெஸ்ட்: காயமடைந்த ரிஷாப் பந்த்; பின்னடைவை சந்தித்த இந்தியா!

Updated: Thu, Jul 24 2025 11:21 IST
Image Source: Google

Rishabh Pant injury: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடனும், ஷர்தூல் தாக்கூர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியாம் டௌசன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்டருமான ரிஷப் பந்த் காயத்தை சந்தித்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்படி இன்னிங்ஸின் 68ஆவது ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசிய நிலையில் ஓவரின் நான்காவது பந்தை ரிஷப் பந்த் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்தார். ஆனால் அவர் அந்த பந்தை சரியாக கணிக்கத்தவறியதன் காரணமாக அது நேரடியாக அவரது ஷூவைத் தாக்கியது. 

இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்து ரிஷப் பந்த் வலியால் அலறினார். பின்னர் அணி மருத்துவர்கள் களத்திற்குள் வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர். இருப்பினும் அவரால் நிற்கக்கூட முடியாததன் காரணத்தால் அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் அவரது காயம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. 

மேலும் பிசிசிஐ மருத்துவக் குழு ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து கண்காணித்து வருவதாகவும் அறிவித்துள்ளது. இருப்பினும் ரிஷப் பந்தின் காயம் தீவிரமடையும் பட்சத்தில் அவர் இப்போட்டியில் மேற்கொண்டு விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ரிஷப் பந்த் போட்டியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கெனவே இப்போட்டியில் ஒரு பேட்டர் குறைவாக இருக்கும் நிலையில், ரிஷப் பந்தின் காயம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டௌசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இந்தியா பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர். ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ்.

Also Read: LIVE Cricket Score

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை