இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் டெல்லியிலிருந்து ரூர்கேலாவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஹரித்வார் மாவட்டம் நார்சன் பகுதியில் அவரது கார் விபத்துக்குள்ளானது. மணிக்கு 90 கிமீ வேகத்தில் சென்ற ரிஷப் பந்தின் கார் சாலைத்தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. 

Advertisement

சாலை தடுப்பில் மோதி பலமுறை சுழன்று விழுந்ததில் கார் தீப்பற்றி எரிந்தது. கார் ஜன்னலை உடைத்து வெளியேற முயற்சித்த ரிஷப் பந்தை எதிரே வந்த பேருந்து ஓட்டுநர், அப்பகுதியில் இருந்த மக்கள் இணைந்து காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயங்களுடன் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பந்துக்கு அந்த மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் டேராடூனில் உள்ள  மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Advertisement

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. முகத்தில் காயங்கள் அதிகமிருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. தலை மற்றும் முதுகில் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனில் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது. இந்த கோர விபத்தில் ரிஷப் பந்த் உயிர்பிழைத்தது உண்மையாகவே அதிர்ஷ்டம் தான். விபத்துக்குள்ளான ரிஷப் பந்தை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் மற்றும் நடத்துநர் பரம்ஜித் ஆகிய இருவருக்கும் கேடயம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 

ரிஷப் பந்த் காருக்கு எதிரே வந்த பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் சுஷில் மான் தான், பந்தின் கார் விபத்துக்குள்ளானதும் உடனடியாக பேருந்தை ஒரமாக நிறுத்திவிட்டு ஓடிவந்து காப்பாற்றினார். அவருக்கு ரிஷப் பந்த் யார் என்றே தெரியாது. மனிதாபிமான அடிப்படையில், விபத்துக்குள்ளான சக மனிதரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் விரைந்து செயல்பட்டு ரிஷப் பந்தை காரிலிருந்து தூக்கினார்.

இதுகுறித்து பேசிய பேருந்து ஓட்டுநர் சுஷில் மான், “கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதும் உடனடியாக பேருந்தை ஓரங்கட்டிவிட்டு, காரை நோக்கி ஓடினேன். அந்த டிரைவர்(ரிஷப் பந்த்) கார் ஜன்னலை உடைத்துவிட்டு பாதி வெளியே வந்துவிட்டார். நான் ரிஷப் பந்த்.. கிரிக்கெட் வீரர்.. என் மொபைலில் என் தாய்க்கு ஃபோன் செய்து தெரிவித்து விடுங்கள் என்றார். 

நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை என்பதால் எனக்கு அவரை யார் என்று தெரியவில்லை. ஆனால் என் பேருந்தில் பயணித்த பலருக்கு அவரை அடையாளம் தெரிந்தது. அவரது ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. அவரை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். காரில் இருந்த 7-8 ஆயிரம் ரூபாயை அவரிடமே கொடுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.

Advertisement

சுஷில் மானின் மனிதாபிமான செயலை பாராட்டும் மற்றும் ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு ரிவார்ட் வழங்கி ஹரியானா அரசு போக்குவரத்து கழகம் கௌரவித்துள்ளது. இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News