ரோஹித் சர்மா குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த காங்கிரஸ் தலைவர்; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகாளை குவித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதனையடுத்து நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் திவீரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறிய சர்ச்சைகுறிய கருத்தானது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அவர் கூறிய கருத்தானது அரசியல் முதல் விளையாட்டு துறையில் உள்ள அனைவரின் எதிர்ப்பையும் சந்தித்து வருவதுடன், அவர் மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றது.
உண்மையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ரோஹித் சர்மா பெரிதளவில் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்ததை அடுத்து, ஷாமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில், “ரோஹித் சர்மா உடல் பருமன் கொண்ட விளையாட்டு வீரர். அவர் தனது எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக, இந்தியா இதுவரை கண்டதிலேயே மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்” என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகியதுடன், அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்களும் எழுந்தன. மேலும் இந்த சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியும் இதற்கு பதிலடி கொடுத்து, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியது. இதனையடுத்து ஷாமா முகமது தனது பதிவை உடனடியாக நீக்கினார். இருப்பினும் அப்பதிவை நகல் எடுத்திருந்த நபர்கள், மீண்டும் பதிவிட்டு அவரை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.