ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்; குவியும் பாராட்டுகள்!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரராக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இந்திய அணிக்காக கிட்டத்திட்ட 250 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர், இன்று உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளபக்கத்தில் காணொளி வாயிலாக தனது ஓய்வு முடிவினை அறிவித்திருந்தார்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிவர் தவான், ஒருநாள் போட்டிகளில் 6,793 ரன்களையும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 1759 ரன்களையும் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை 222 போட்டிகளில் விளையாடியுள்ள தவான் 2 சதம் மற்றும் 51 அரைசதங்களுடன் 6,769 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஷிகர் தவானிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிசிசிஐ, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர். இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் ஷிகர் தவான் விளையாடிய வந்த ஐபிஎல் அணியானது பஞ்சாப் கிங்ஸ் என அனைத்து தரப்பில் இருந்தும் ஷிகர் தவானுக்கு வாழ்த்து செய்திகள் குவிந்து வருகின்றன.
பிசிசிஐ தனது ட்விட்டர் பதவில், “ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால், அவர் முன்னோக்கிச் செல்லும் பாதையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்” என்று பதிவிட்டுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது பதிவில், “ஷிகர் தவான் ஒரு அற்புதமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்! எதிர்காலத்தில் நீங்கள் எடுக்கும் எல்லாவற்றிலும் அதே மகிழ்ச்சியைப் பரப்புவீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்று பதிவிட்டுள்ளார்.
மேற்கொண்டு முன்னாள் விரர் வீரேந்திர் சேவாக் தனது பதிவில், “மொஹாலியில் நீங்கள் எனக்கான மாற்று வீரராக நீங்கள் களமிறங்கியது முதல் இன்றுவரை நீங்கள் திரும்பிப் பார்க்கவில்லை மற்றும் பல ஆண்டுகளாக பல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் வெற்றியிலும் முக்கிய பங்கினை வகித்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கவும், வாழ்க்கையை முழுமையாக வாழவும் எனது வாழ்த்துக்கள்” என்று பதிவுசெய்துள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தனது பதிவில், “பெரிய தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு மனிதன். ஆனால் அதற்கான தகுதியான பாராட்டுகளைப் அவர் பெறவில்லை. ஆனால் அவரை அறிந்தவர்களுக்கு தெரியும், அணி வெற்றி பெறும் வரை யாருக்கு கைதட்டல் கிடைத்தது என்பது பற்றி அவர் கவலைப்பட மாட்டார் என்பது. உங்கள் இரண்டாவது இன்னிங்ஸுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்” என்று பதிவுசெய்துள்ளார்.