எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் டேவிட் பெடிங்ஹாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டோனி டி ஸோர்ஸி 8 ரன்னிலும், டேவிட் பெடிங்ஹாம் 11 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டாம் அபெல் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஜோர்டன் ஹார்மன் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 53 ரன்கள் எடுத்த கையோடு ஹார்மென் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் ஐடன் மார்க்ரம் 8 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் மிடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களைச் சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் தரப்பில் கேப்டன் பிஜோர்ன் ஃபோர்டுன், மிட்செல் ஓவென் மற்றும் ஈஷான் மலிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு லுஹான் ட்ரெ பிரிட்டோரியஸ் மற்றும் மிட்செல் ஓவன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லுஹான் ட்ரே பிரிட்டோரியஸ் 3 ரன்களுக்கும், மிட்செல் ஓவன் 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ருபின் ஹர்மான் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய மிட்செல் வான் பியூரன் ஒரு ரன்னிலும், டெவான் மரைஸ் 2 ரன்களுக்கும், துனித் வெல்லாலகே 8 ரன்களுக்கு என ஆட்டமிழந்தனர். அதன்பின் ஹர்மானுடன் இணைந்த ஆண்டில் பெஹ்லுக்வாயோ ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
Also Read: Funding To Save Test Cricket
பின் 22 ரன்களில் பெஹ்லுக்வாயோ 22 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்மானும் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவற, பார்ல் ராயல்ஸ் அணி 18.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் தரப்பில் கிரெய்க் ஓவர்டன், மார்கோ ஜான்சன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.