சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; நியூசிலாந்துக்கு 250 டார்கெட்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே நீக்கப்பட்டு டேரில் மிட்செல் லெவனில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய அணியில் ஹர்ஷித் ரானாவுக்கு பதிலாக வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்திய அணி வீரர் விராட் கோலியின் 300ஆவது ஒருநாள் போட்டியாகவும் இது அமைந்தது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 2 ரன்களுடன் நடையைக்கட்ட, அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மாவும் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் பிலீப்ஸின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தர். இதனால் இந்திய அணி 30 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஸர் படேல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 98 ரன்களை எட்டிய நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அக்ஸர் படேல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 79 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேஎல் ராகுல் 23 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையு, கைல் ஜேமிசன், வில்லியம் ஓ ரூர்க், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.