இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் 3 விக்கெட்டும் ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள், இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து ரன் குவித்தனர். 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில, 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் எடுத்திருந்தது. இதில் கேப்டன் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.
இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 432 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.
இதையடுத்து, 355 ரன்கள் எடுத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற இமாலய இலக்குடன், இந்தியா தனது 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பின் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஓவர்டன் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். அதன்பின் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த புஜாரா தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடியைக் கொடுக்கும் வகையில் விளையாடினார்.
மறுமுனையில் ரோஹித் அரைசதம் அடித்து அசத்த, புஜாரா பவுண்டரிகளை விளாசினார். இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்களை சேர்த்தது.
இதில் ரோஹித் சர்மா 59 ரன்களுடனும், புஜாரா 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.