இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்கள் அடித்தது.
அதன்பின் 95 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அபார சாதத்தால் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரூட் 109 ரன்களில் ஆட்டமிழக்க, பின் வந்த வீரர்கள் இந்திய அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 303 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
மேலும் இந்திய அணியை விட மொத்தமாக 208 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றதையடுத்து, 209 ரன்கள் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் - ரோஹித் சர்மா இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த புஜாரா சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா, புஜாரா ஆகியோர் தலா 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இதன் மூலம் இந்திய அணி 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நாளை ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.