இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது.
முதல் இன்னிங்ஸ்
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் - ரோஹித் சர்மா இணை அபாரமான தொடக்கத்தைத் தந்தது. இதில் கே.எல்.ராகுல் சதமடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன் மூலம் இந்திய அணி 364 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிரைவு செய்தது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 129 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், கேப்டன் ஜோ ரூட்டின் அபார சதத்தினால் முன்னிலைப் பெற்றது.
இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 180 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸ்
அதன்பின் 27 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல். விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானே - புஜாரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை தோல்வியிலிருந்து மீட்டது. இதில் ரஹானே அரைசதம் கடந்தார். இந்த இணை 4ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப் முறையே 100 ரன்களையும் சேர்த்து அசத்தியது.
இதையடுத்து ஐந்தாம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய முகமது ஷமி - ஜஸ்பிரித் பும்ரா இணை தங்கள் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஷமி அரைசதமடித்து மிரளவைத்தார்.
இதனால் இந்திய அணி 298 ரன்களில் இரண்டாவது இன்னிங்ஸை டிகளர் செய்தது. இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் திணறியது. இருப்பினும் கேப்டன் ரூட் - பட்லர் இணை தோல்வியிலிருந்து அணியை மீட்கப் போராடினர்.
ஆனால் அவர்களை பும்ரா, சிராஜ் இணை சாமர்தியமாக வெளியேற்றி அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். இதில் முகமது சிராஜ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது.