இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா -கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் 19ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் முன்கூட்டியே உணவு இடைவேளை எடுக்கப்பட்டது.
உணவு இடைவேளை முடிந்து மீண்டும் களத்தில் இறங்கிய இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
அதன்பின் அதிரடியாக விளையாடிவந்த ரோஹித் சர்மா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாராவும் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 157 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 55 ரன்களுடனும், கேப்டன் கோலி ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.