இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து, களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

இதனால் இலங்கை அணியானது 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  பின்னர் இணைந்த கேப்டன் தனஞ்செயா டி சில்வா - அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தனஞ்செயா டி சில்வா 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும் எடுத்திருந்த அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்காவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

Advertisement

இதனால் இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஷோயப் பஷீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு டேன் லாரன்ஸ் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் இங்கிலாந்து அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியானது விக்கெட் இழப்பின்றி 22 ரன்களைச் சேர்த்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை பென் டக்கெட் 13 ரன்களுடனும், டேன் லாரன்ஸ் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பென் டக்கெட் 18 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 6 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரரான டேன் லாரன்ஸ் 30 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுபக்கம் பொறுப்பாக விளையாடி வந்த ஹாரி புரூக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்த நிலையில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜேமி ஸ்மித் - கிறிஸ் வோக்ஸ் இணையும் சிறப்பாக விளையாட இங்கிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஜேமி ஸ்மித் தனது அரைசதத்தை கடந்த நிலையில், மறுபக்கம் 25 ரன்களைச் சேர்த்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டை இழந்தார். ஆனாலும் தனது அதிரடியை நிறுத்தாத ஜேமி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 61 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களை எடுத்திருந்த நிலையில் மோசமான வானிலை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இத்துடன் முடிவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி தரப்பில் ஜேமி ஸ்மித் 72 ரன்களுடனும், கஸ் அட்கின்சன் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 23 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News