சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீரர்கள் - காணொளி!

Updated: Tue, Dec 19 2023 20:36 IST
சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீரர்கள் - காணொளி! (Image Source: Google)

ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கான வீரர்களை ஆர்வத்துடன் ஏலமெடுத்து வருகின்றனர். இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிதாக நியூசிலாந்து வீரர்களான டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்தனர். மேலும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரரான சமீர் ரிஸ்வி சிஎஸ்கே அணியால் ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 

சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்துள்ள இந்த வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ரச்சின் ரவீந்திரா கூறுகையில், “முதல் முறையாக ஐபிஎல் விளையாடப் போகிறேன். சிறந்த வீரர்களான மகேந்திர சிங் தோனி, ஜடேஜா ஆகியோர் உள்ள சிஎஸ்கே அணியில் இணையவுள்ளதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் வரவேற்பு, மைதானத்தில் நிலவும் சூழல் குறித்தெல்லாம் நியூசிலாந்து வீரர்கள் நிறைய கூறியுள்ளார்கள். சென்னை ரசிகர்களை நான் நிச்சயம் மகிழ்விப்பேன் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து பேசிய டேரில் மிட்செல், “மஞ்சள் நிற ஜெர்சியில் உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்க என்னை அனுமதித்ததற்கு நன்றி. சிஎஸ்கே ஒரு அற்புதமான அணி, அதில் ஒரு பகுதியாக இருக்க என்னால் காத்திருக்க முடியவில்லை. இப்போது டெவோன் கான்வே மிட்செல் சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரருடன் விளையாடுவதில் உற்சாகமாக உள்ளேன். மேலும் தோனி மற்றும் ஃபிளமிங்குடன் இணைந்து கற்றுக்கொள்ள ஆர்வமுடன் உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் இந்த ஏலத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சமீர் ரிஸ்வி கூறுகையில், “ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளது கனவு போல் உள்ளது. என்னால் இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இந்த தருணத்தை உணர சிறிது நேரம் எடுக்கும். சிஎஸ்கேவுக்காக விளையாட ஆவலாக இருக்கிறேன்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை