ரோஹித் சர்மா கொண்டாட்டத்தை ரீ-கிரியேட் செய்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - வைரலாகும் கானொளி!

Updated: Mon, Oct 07 2024 13:01 IST
Image Source: Google

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் கோலாகலமாக முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக டுவைன் பிரிட்டோரியஸ் 25 ரன்களையும், ஷாய் ஹோப் 22 ரன்களையும், ரொமாரியோ ஷெப்பர்ட் 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. லூசியா கிங்ஸ் தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய லூசியா கிங்ஸ் அணியில் ஜான்சன் சார்லஸ் 7, ஃபாஃப் டூ பிளெசிஸ் 21, அக்கீம் அகஸ்டே 13, டிம் செஃபெர்ட் 3 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் இணைந்த ஆரோன் ஜோன்ஸ் - ரோஸ்டன் சேஸ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் ஜோன்ஸ் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 48 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அணியையும் வீழ்த்தி அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது கரீபியன் பிரிமியர் லீக் தொடரி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. மேலும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ரோஸ்டன் சேஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேசமயம், தொடர் முழுதும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் தொடர் நாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டி முடிவில் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் கொண்டாடிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, நடந்து முடிந்த 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கோப்பையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கொண்டாடியதைப் போலவே ஃபாஃப் டு பிளெசிஸும் சிபிஎல் கோப்பையை வென்ற பிறகு கொண்டாடினார்.

 

Also Read: Funding To Save Test Cricket

அந்தவகையில், சிபிஎல் கோப்பையை வென்ற பிறகு, ரோஹித்தின் பிரபலமான ஸ்லோ-மோஷன் நடையை ஃபாஃப் டூ பிளெசிஸ் செய்து காட்டி கோப்பையை பெற்றுக்கொண்டார். டூ பிளெசிஸ், ரோஹித் சர்மாவைப் போலவே, கோப்பையைச் சுமந்துகொண்டு மேடைக்கு மெதுவாக நடந்து சென்றார், அவருடைய குழு அவரைக் கொண்டாடுவதற்காகக் காத்திருந்தது. இந்நிலையில் இக்காணொளி தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை