விராட் கோலிக்காக செய்பட்ட பிரம்மாண்ட ஏற்பாடு; வாய்பிளக்க வைத்த கேரள ரசிகர்கள்!

Updated: Tue, Sep 27 2022 19:58 IST
Fans Make Virat Kohli’s MASSIVE Cutout in Trivandrum Ahead of 1st T20I vs South Africa (Image Source: Google)

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நாளை புதன்கிழமை திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

நேற்று திருவனந்தபுரம் வந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் முதல் டி20 போட்டிக்கு சினிமா நட்சத்திரங்களையும் மிஞ்சும் அளவுக்கு கேரள ரசிகர்கள் சிறப்பான ஏற்பாடுகளுக்கு திட்டமிட்டுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்ட் மைதானத்தில் தான் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இங்கு கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் மோதின. இதில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

விராட் கோலிக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி கேரளா வந்துள்ளதால் இம்முறை பல ஸ்பெஷல் ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். குறிப்பாக சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டும்தான் கட் அவுட் வைக்கப்படும். இந்த நிலையில் போட்டி நடைபெறும் கிரீன் பீல்ட் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கட்டவுட் வைத்துள்ளனர்.

 

மேலும் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் தங்கி உள்ள ஹோட்டல் முன் கூடி உள்ள கேரள ரசிகர்கள் பதாகைகள் ஏந்தி அவரை வரவேற்றுள்ளனர். எனினும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இந்திய அளவில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனால் மிஸ் யூ சஞ்சு சாம்சன் என்ற பதாகைகளை கேரள ரசிகர்கள் தயாரித்து வருகின்றனர்.

அதேசமயம் எதிர்வரும் 16ஆம் தேதி ஆஸ்திரேலியவில் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்தியா உட்பட மொத்தம் 16 நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. பெரும்பாலான அணிகள் தங்களது அணியை அறிவித்துள்ளன. இந்திய அணி முதல் போட்டியில் வரும் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

இந்தப் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. அந்த நகரம் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது. டி20 உலகக் கோப்பையின் புரோமோஷனின் ஒரு பகுதியாக விராட் கோலி உட்பட பன்னாட்டு கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும் போஸ்டர்களும் பேனர்களும் மெல்போர்னில் அமைக்கப்பட்டுள்ளன. அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை