இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான போட்டி கொழும்புவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப், ஒமைர் யூசுப் ஆகியோர் ஹங்கேர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஃபர்ஹாம், ஹசீபுல்லா கான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தனர். இதில் ஃபர்ஹாம் 35 ரன்களுக்கும், ஹசீபுல்லா 27 ரன்காளுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய காம்ரன் குலாம் 15, கேப்டன் முகமது ஹாரிஸ் 15 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய காசிம் அக்ரம் சமாளித்து விளையாடி 48 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் பாகிஸ்தான் ஏ அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ராஜ்வர்தன் ஹங்கேர்கர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.