இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று தம்முடைய 42ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 2007 டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து 12 பந்தில் 50 ரன்கள் கடந்து காலத்தால் அழிக்க முடியாத உலக சாதனைகளை படைத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதை விட 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

Advertisement

குறிப்பாக அந்த உலகக் கோப்பையில் உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் தேசத்திற்காக விளையாடி அவர் புற்றுநோயிலிருந்தும் போராடி குணமடைந்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். அந்த வகையில் இந்தியாவின் உலகக் கோப்பை நாயகனுக்கு ஏராளமான ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் ஆரம்ப காலங்களில் பார்ட்டியில் ஈடுபட்டு பொறுப்பின்றி இருந்த தம்மிடம் யுவராஜ் கொடுத்த உத்வேகமான வார்த்தைகளும் ஆலோசனைகளும் தான் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு உதவியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒரு முறை பெங்களூருவில் நடைபெற்ற கேஎஸ்சிஏ கோப்பையில் நான் விளையாடினேன். அதில் நான் இந்தியன் ஏர்லைன்ஸ் அணிக்காக விளையாடினேன். அது இறுதுப்போட்டி என்பதால் யுவராஜ் மற்றும் லக்ஷ்மண் பாய் ஆகியோரும் விளையாடினார்கள்.

அப்போட்டியில் ஸ்லிப் பகுதியில் இருந்து யுவராஜ் என்னுடைய பவுலிங்கை பார்த்தார். 2003 காலகட்டத்தில் நடைபெற்ற அந்த போட்டியை முடித்து விட்டு உடைமாற்றும் அறையில் நான் அணிந்திருந்த ஸ்பைக்குகளை கழற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அதை பார்த்த யுவராஜ் பாய் என்னிடம் ஸ்ரீசாந்த் முதலில் நீ பார்ட்டிக்கு செல்வதை நிறுத்தி விட்டு கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று சொன்னார்.

குறிப்பாக முதல் தர கிரிக்கெட்டில் இதே போல ஓய்வெடுக்காமல் விளையாடினால் அடுத்த 2 – 3 வருடங்களில் உன்னால் இந்தியாவுக்கு விளையாட முடியும் என்று அவர் சொன்னார். யுவராஜ் போன்ற ஒரு நட்சத்திர வீரர் 19 – 20 வயதில் இருந்த என்னிடம் அப்போது அப்படி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் என்னால் இந்தியாவுக்கு விளையாட முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை அவர் எனக்கு சொன்னார். அதன் பின் அவருடன் இணைந்து 2007 டி20 உலகக் கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்ற டெஸ்ட் தொடர் போன்ற வெற்றிகளில் அங்கமாக இருந்தது மறக்க முடியாத நினைவுகளாக அமைந்தது” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News