ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகும் ஹர்திக் பாண்டியா; சிக்கலில் மும்பை இந்தியன்ஸ்!

Updated: Sat, Dec 23 2023 18:56 IST
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகும் ஹர்திக் பாண்டியா; சிக்கலில் மும்பை இந்தியன்ஸ்! (Image Source: Google)

ஐபிஎல் 17ஆவது சீசன் கிரிக்கெட் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா தங்களுடைய புதிய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்தது அந்த அணி ரசிகர்களையே கொந்தளிக்க வைத்தது. ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் கூட கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வந்த மும்பைக்கு 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே ரோஹித் சர்மா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

அதை தொடர்ந்து 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் மொத்தம் 5 கோப்பைகளை வென்ற அவர் குறுகிய காலத்திலேயே மும்பையை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க வைத்து இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிகரமாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் அவர் கடைசி வரை கேப்டனாக செயல்படுவார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வலுக்கட்டாயமாக வாங்கிய மும்பை தற்போது ரோஹித் சர்மாவை கழற்றி விட்டு புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இதனால் கோபமடைந்த ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் மும்பையை பின் தொடர்வதை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

முன்னதாக 2023 உலகக் கோப்பையில் பாதியிலேயே காயமடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா அடுத்ததாக நடைபெற்ற தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் வரும் 2024 ஜனவரி 11 – 17 வரை சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் உள்ள டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அதைவிட காயத்திலிருந்து குணமடைய கூடுதலான மாதங்கள் தேவைப்படும் என்பதால் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், “இப்போதைக்கு ஹர்திக் பாண்டியா ஃபிட்னஸ் பற்றி எங்களுக்கு எந்த நேர்மறையான தகவலும் கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடருக்கு முன்பாகவும் அவர் விளையாடுவதற்கு தயாராக இருப்பார் என்று சொல்வது கேள்விக்குறியாக இருக்கிறது” என கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே அடிக்கடி காயமடைந்து பெரும்பாலும் நாட்டுக்காக விளையாடாமல் இருந்து வரும் ஹர்திக் பாண்டியா 2024 ஐபிஎல் தொடரிலும் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது தெரிய வருகிறது. இந்த செய்தி மும்பை அணிக்கு கண்டிப்பாக தற்போது இடியாக அமைந்துள்ளது எனலாம். இதனால் பாண்டியா விளையாட முடியாமல் போனால் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக நியமிக்கவே திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை