பவுண்டரில் எல்லையில் அசத்தலான கேட்ச்சை பிடித்த ஹர்திக் பாண்டியா; வைரல் காணொளி!

Updated: Thu, Oct 10 2024 10:43 IST
Image Source: Google

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

அதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிதீஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 74 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்களையும் சேர்க்க, ஹர்திக் பாண்டியா 32 ரன்களையும் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்

இதனையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் இறுதிவரை போராடிய மஹ்முதுல்லா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 41 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இந்திய அணி சார்பில் நிதிஷ் ரெட்டி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, மயங்க் யாதவ், ரியான் பராக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இதன்மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய நிதீஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச் ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. அதன்படி, இன்னிங்ஸின் 14ஆவது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசிய நிலையில், அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ரிஷாத் ஹொசைன் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் டீப் மிட்விக்கெட் திசையை நோக்கி தூக்கி அடித்தார்.

 

Also Read: Funding To Save Test Cricket

அப்போது ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஹர்திக் பாண்டியா பந்தை கணித்து அங்கிருந்து ஓடி வந்ததுடன், அபாரமான கேட்ச்சையும் பிடித்து அசத்தியனார். ஒரு கணம் பந்தை பிடித்து பவுண்டரி எல்லையை ஹர்திக் பாண்டியா தாண்டிவிடுவாரோ என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அந்த கேட்ச்சை முழுமையாக பிடித்து ரிஷாத் ஹொசைனை வழியனுப்பி வைத்தார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை