ஹர்திக் பாண்டியாவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன் - சஞ்சய் பங்கார்!

Updated: Sun, Jul 21 2024 14:56 IST
Image Source: Google

இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டும் வந்துள்ளார். அதுதவிர்த்து நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டதுடன், அத்தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவும் உறுதுணையாக இருந்தார்.

இதனால் இனிவரும் காலங்களில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற கருத்துகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அவரை ஒட்டுமொத்தமாக கேப்டனுக்கான தேர்வில் இருந்து பிசிசிஐ ஒதுக்கியுள்ளது போல், புதிய கேப்டனை அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

இதில் டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டதுடன், துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிலும் ஹர்திக் பாண்டியா டி20 அணியில் இடம்பிடித்திருக்கும் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ கேப்டன் பதவியில் அமர்த்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பதவி கிடைக்காததால் அவர் வருதமடைந்திருப்பார் என முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சஞ்சய் பங்கார், “ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக இல்லாதது எனக்கு சற்று ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் முந்தைய டி20 உலகக் கோப்பைக்கு முன்பே ஹர்திக் பாண்டியா ஒருவேளை காயமடையாமல் இருந்திருந்தால் நிச்சயம் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக, அவர் தான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டிருப்பார் என தோன்றுகிறது. மேலும் இந்திய அணியும், தேர்வாளர்களும் அந்த திசையில் தான் செல்ல ஆரம்பித்தன.

ஆனால் தற்போது இந்திய அணியின் இந்த திடீர் யூ-டர்னிற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. மேலும் இதுகுறித்து ஹர்திக் பாண்டியாவிடம் தேர்வு குழுவினர் மற்றும் அணியின் பயிற்சியாளர் நிச்சயம் பேசியிருப்பர். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முன்பு சூர்யகுமார் யாதவ் குறைவான உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினார் என்பது இங்கு விவாதம் அல்ல.

ஆனால் அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது, உள்ளூர் கிரிக்கெட்டிலும் அவர் மும்பையை வழிநடத்தியுள்ளார் மற்றும் வீரர்களிடமிருந்து சிறந்ததை எவ்வாறு பிரித்தெடுப்பது என்பது அவருக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். எனவே சூர்யகுமாரை கேப்டனாக்கியதில் தவறில்லை. அவர் ஒரு நல்ல வேலையைச் செய்வார் என்று நான் முழுமையாக நம்புகிறேன், ஆனால் ஹர்திக் பாண்டியாவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஏனெனில் ஒரு வீரராக, தேர்வாளர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள், புதிய பயிற்சியாளர் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பதை நீங்கள் எப்போதும் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அவர்கள் தன்னை டி20 கேப்டன் பதவிக்கு தேர்ந்தெடுக்காததை நினைத்து நிச்ச்யம் ஹர்திக் பாண்டியா மிகவும் வேதனைப்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை