சதமடித்து சாதனைகள் படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
Harmanpreet Kaur Records: சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் ஹர்மன்ப்ரீத் கவுர் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்களை விளாசிய இரண்டாவது வீராங்கனை எனும் சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் சமன்செய்துள்ளார். முன்னதாக மிதாலி ராஜ் 7 சதங்களை அடித்த நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுரும் 7 சதங்களை விளாசி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த இந்திய வீராங்கனைகள்
- ஸ்மிருதி மந்தனா - 11
- ஹர்மன்ப்ரீத் கவுர் - 7
- மிதாலி ராஜ் - 7
- பூனம் ரவுத் - 3
- திருஷ் காமினி - 2
இதுதவிர்த்து இப்போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஹர்மன்ப்ரீத் கவுர் 4000 ஒருநாள் ரன்களையும் எட்டியுள்ளார். இதன் மூலம் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த மூன்றாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் ஸ்மிருதி மந்தனா மற்றும் மிதாலி ராஜ் ஆகியோருக்கு மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (இந்தியா)
- மிதாலி ராஜ் - 7805 ரன்கள் (211 இன்னிங்ஸ்)
- ஸ்மிருதி மந்தனா - 4588 ரன்கள் (105 இன்னிங்ஸ்)
- ஹர்மன்பிரீத் கவுர் - 4000* ரன்கள் (129 இன்னிங்ஸ்)
- அஞ்சும் சோப்ரா - 2856 ரன்கள் (112 இன்னிங்ஸ்)
- தீப்தி சர்மா - 2300 ரன்கள் (91 இன்னிங்ஸ்)
இப்போட்டி குறித்து பேசினால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 102 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 50 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்லீன் தியோல் தலா 45 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் 98 ரன்களையும், எம்மா லம்ப் 68 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.