இந்திய டெஸ்ட் அணிக்கு கருண் நாயர் சரியான தேர்வாக இருப்பார் - அனில் கும்ப்ளே!
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நடத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்றும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடங்களை யார் நிரப்புவார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன.
மேற்கொண்டு ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாய் சுதர்ஷன், கருண் நாயர், ரஜத் படிதார், ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. இந்நிலையில் தற்போது தேர்ந்தெடுக்கப்படவுள்ள இந்திய அணியில் நம்பர் 4ஆம் இடத்தில் விளையாட கருண் நாயர் தான் சரியானா தேர்வாக இருப்பார் என்று முன்னாள் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறிவுள்ளார்.
இதுகுறித்து பேசிய அனில் கும்ப்ளே, “தற்போது இந்திய டெஸ்ட் அணியில் 4ஆவது இடத்தில் யார் பேட்டிங் செய்வார் என்பது குறித்து சரியான தெளிவு இல்லை. ஆஸ்திரேலியாவில் ரோஹித் சர்மா விளையாடாத போது, சில மாற்றங்கள் செய்யப்பட்டன. கேஎல் ராகுல் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அதன் பிறகு, மிடில் ஆர்டர் நிச்சயமற்றதாகத் தெரிகிறது. இங்கிலாந்தில் 4ஆவது இடத்தில் பேட்டிங் செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
கருண் நாயர் தனது உள்நாட்டு அனுபவத்துடன் இந்திய அணியில் மீண்டும் வருவதற்கு தகுதியானவர். இங்கிலாந்து நிலைமைகளில் அனுபவம் வாய்ந்த ஒருவர் உங்களுக்குத் தேவை. அதன்படி பார்த்தால் கருண் நாயர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார், அவர் ஏற்கனவே அங்கு இருந்துள்ளார். அவர் தற்போது 30 வயதை கடந்த ஒரு வீரராக இருக்கலாம், ஆனால் கிரிக்கெட் அடிப்படையில் அவர் இன்னும் இளமையாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
கருண் நாயர் குறித்து பேசினால் இந்திய டெஸ்ட் அணிக்காக 2016ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிவுள்ளார். இருப்பினும் இதில் அவர் முற்சதம் விளாசியும் அசத்தியுள்ளார். ஆனால் அதன்பின் அவரால் தற்போது வரை இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் உள்ளார். இருப்பினும் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை தொடர்களில் ரன்களைக் குவித்ததன் காரணமாக அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.