ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இதனால் 2013க்குப்பின் தொடர்ந்து 10ஆவது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா வெறும் கையுடன் நாடு திரும்பியது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டம் கிடைக்கும் அதை சரியாக பயன்படுத்தாத ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் உலகின் நம்பர் ஒன் பவுலரான அஸ்வினை தேர்ந்தெடுக்காதது தோல்விக்கு காரணமானது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Advertisement

மேலும் விராட் கோலி, புஜாரா மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் நட்சத்திர வீரர்கள் அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதும் தோல்வியை கொடுத்தது. முன்னதாக கடந்த வருடம் இதே போல இருதரப்பு தொடர்களில் அசத்தி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தும் முக்கியமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு சொதப்பலாக செயல்பட்ட சீனியர் வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர்.

Advertisement

அதன் காரணமாக அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள் இவர்களை வைத்துக் கொண்டு எப்போதும் கோப்பையை வெல்ல முடியாது என்று கொந்தளிப்பதுடன் டி20 கிரிக்கெட்டை போலவே புதிய கேப்டன் தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் இந்த ஒரு தோல்வியால் இந்தியாவை குறைக்கும் மதிப்பிட வேண்டாம் என்று தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி டெஸ்ட் அணியில் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் 4ஆவது பவுலர் இடத்திற்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “வெறும் ஒரு போட்டியில் சந்தித்த தோல்வியை வைத்து நாம் முடிவுக்கு வந்து விடக்கூடாது. இந்தியாவில் எப்போதும் சிறப்பான திறமை இருக்கிறது. அதே சமயம் நான் திடீரென விராட் கோலி அல்லது புஜாரா ஆகியோரை தாண்டி இந்திய அணியை பார்க்க விரும்பவில்லை. குறிப்பாக விராட் வெறும் 34 வயதை மட்டுமே நிரம்பியுள்ளார். அதே சமயம் இந்தியாவுக்கு விளையாட ஏராளமான வீரர்கள் தயாராக இருக்கின்றனர். அதற்கு சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வீரர்களை நாம் பார்க்க வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து தேர்வு செய்யக்கூடாது. எனவே உள்ளூர் தொடர்களில் மட்டுமே நீங்கள் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஜெய்ஸ்வால் அல்லது படிதார், பெங்கால் அணியில் விளையாடும் அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்கள் நிறைய ரன்களை அடித்துள்ளனர். சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் மிகவும் இளமையானவர்கள். அதை விட என்னுடைய கருத்தை ஹர்திக் பாண்டியா கேட்பார் என்று நம்புகிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பாக இங்கிலாந்து போன்ற கால சூழ்நிலைகளில் இந்தியாவுக்காக கண்டிப்பாக விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News