ஜோகோவிச்சுடன் நான் இயல்பாக தொடர்பில் இருந்து வருகிறேன் - விராட் கோலி!

Updated: Sun, Jan 14 2024 19:57 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருக்கிறார். ஏனெனில் கடந்த 15 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் 26,000க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ள அவர், 80 சதங்கள் விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். 

இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்கின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கால்பந்து ஜாம்பவான்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட 3ஆவது விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். அந்த நிலையில் விராட் கோலியுடன் கடந்த சில வருடங்களாகவே மொபைலில் மெசேஜ் செய்து தொடர்பில் இருப்பதாக டென்னிஸ் ஜாம்பவான் வீரர் நோவாக் ஜோகோவிக் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் அவரின் கேரியர் மற்றும் சாதனைகளை ரசிப்பதாக தெரிவித்த ஜோக்கோவிக் இந்தியாவுக்கு செல்லும் போது விராட் கோலியை நேரில் பார்த்து சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதன் முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோகோவிக் தமக்கு மெசேஜ் செய்த போது அது போலியான கணக்கிலிருந்து வந்திருக்கும் என்று நினைத்ததாக விராட் கோலி கூறியுள்ளார்.

இருப்பினும் உண்மையாகவே ஜோகோவிக் தமக்கு மெசேஜ் செய்திருந்ததாக தெரிவிக்கும் விராட் கோலி அப்போதிலிருந்து தாங்கள் நண்பர்களாக இருந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் சச்சினை முந்தி ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த போது ஜோகோவிக் தமக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,“ஜோகோவிச்சுடன் நான் இயல்பாக தொடர்பில் இருந்து வருகிறேன். முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோகோவிக் கணக்கை பார்க்கும் போது அவருக்கு ஹலோ என்று மெசேஜ் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் ஏற்கனவே அங்கு எனக்கு மெசேஜ் வந்திருந்தது. அப்போது அந்த கணக்கு போலியாக இருக்கும் என்று நினைத்தேன். இருப்பினும் அவருடைய பக்கத்தை சென்று பார்த்த பின் அது அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை தெரிந்து கொண்டேன்.

அப்போதிலிருந்து நாங்கள் செய்திகளை பகிர்ந்து கொள்கிறோம். இதுவரை அவர் சாதித்துள்ள அனைத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். எங்களிடையே நல்ல நட்பு இருக்கிறது. உலக விளையாட்டு வீரர்களுடன் தொடர்பில் இருப்பது நல்ல உணர்வை கொடுக்கிறது. சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த போது அவர் எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அவர் இந்தியாவுக்கு வரும் போது அல்லது அவர் விளையாடும் நாட்டில் நான் இருந்தால் விரைவில் சந்தித்து நட்பாக தேநீர் அருந்துவோம் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

அதேபோல் இது குறித்து ஜோகோவிக் கூறுகையில், "இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென பல வருடங்களாக நான் உணர்கிறேன். இந்தியாவுக்கு நான் ஒரே ஒரு முறை மட்டுமே சென்றுள்ளேன். கடந்த 10 - 11 வருடங்களுக்கு முன்பாக புதுடெல்லியில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் விளையாடுவதற்காக சென்றேன். விரைவில் மகத்தான வரலாறும் கலாச்சாரமும் மத நம்பிக்கையும் கொண்ட அந்த நாட்டுக்கு செல்வேன் என்று நம்புகிறேன்.

இந்தியாவில் உள்ள சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி போன்ற விளையாட்டு வீரர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். குறிப்பாக கடந்த சில வருடங்களாக விராட் கோலியுடன் நான் இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்தி மூலம் தொடர்பில் இருக்கிறேன். ஆனால் இன்னும் நேரில் பார்க்கவில்லை. அவருடைய கெரியர் மற்றும் சாதனைகளை நான் எப்போதும் ரசிக்கிறேன்" என்று கூறியுள்ளர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை