நாங்கள் தோல்வியைத் தழுவியது நல்லது - ஜித்தேஷ் சர்மா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியி டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷான் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 94 ரன்களையும், அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களையும் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் சிறு சிறு பங்களிப்பினை வழங்கினர். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் ரொமாரியோ ஷெஃபர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், விராட் கோலி 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் சர்மா, “இப்போட்டியில் நாங்கள் 20-30 ரன்கள் கூடுதலாக கொடுத்ததாக நான் நினைக்கிறேன், இந்த போட்டியில் எப்படி தோல்வியடைந்தோம் என்பது குறித்து என்னிடம் எந்த பதிலும் இல்லை. ஏனெனில் நாங்கள் இப்போட்டியில் அதிக தீவிரத்துடன் விளையாடவில்லை என்று நினைக்கிறேன், ஆனால் இந்த ஆட்டத்தில் தோற்றது நல்லது. டிம் டேவிட் போன்ற வீரர் இல்லாத நிலையில், நான் ஆட்டமிழந்து வெளியேறியதால் வருத்தமடைந்தேன்.
Also Read: LIVE Cricket Score
இருப்பினும் இந்த ஆட்டத்தில் நாங்கள் தோல்வியைத் தழுவியது நல்லது என்று நான் நினைக்கிறேன், நேர்மறையான விஷயங்கள் என்னவென்றால் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்கிறோம். இந்த தோல்விக்குப் பிறகு இந்த பின்னடைவைப் பெறுவது நல்லது என்று நான் நினைக்கிறேன், இதனால் எதிர் வரவிருக்கும் ஆட்டங்களில் நாங்கள் எங்கள் தவறுகளைத் திருத்தி நல்ல முறையில் மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.