ஐசிசி உலகக்கோப்பை 2023: இப்ராஹிம் ஸத்ரான் அபார சதம்; ஆஸிக்கு 292 டார்கெட்!

Updated: Tue, Nov 07 2023 17:50 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில் இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் இணைந்த இப்ராஹிம் ஸத்ரான் - ரஹ்மத் ஷா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஸத்ரான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மத் ஷா 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிந்து பெவிலியன் திரும்பினார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 26 ரன்களுக்கும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 22 ரன்களுக்கும், முகமது நபி 12 ரன்களுக்கும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இப்ராஹிம் ஸத்ரான் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சதமடித்த முதல் ஆஃப்கானிஸ்தான் வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். 

அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷித் கான் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 35 ரன்களைச்  சேர்த்து பினீஷிங் கொடுக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இப்ராஹிம் ஸத்ரான் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 129 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தன் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களைச் சேர்த்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை