இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணைஅதிரடியாக விளையாடி 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

Advertisement

இதில் ரோஹித் சர்மா 4 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியாக 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக வந்த விராட் கோலி தம்முடைய ஸ்டைலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் ரோஹித் அவுட்டான பின் அதிரடியாக விளையாடிய ஷுப்மன் கில் வேகமாக ரன்களை குவித்ததால் சதத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79 ரன்களில் மும்பை நிலவிய அதிகப்படியான வெப்பத்தால் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.

Advertisement

அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் நியூசிலாந்து பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறிய விராட் கோலி 9 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 117 ரன்கள் விளாசி ஆட்டமிழருந்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை முந்தி 50 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை விராட் கோலி படைத்தார்.

ஆனால் அவருக்கு பின் வந்து அவரை விட அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி 8 சிக்சருடன் தம்முடைய பங்கிற்கு சதமடித்து 105 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் கேஎல் ராகுல் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி 2 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 50 ஓவர்களில் இந்தியா 397/4 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில், நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 13 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த கேப்டன் கேன் வில்லியம்சன் - டெரில் மிட்செல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் அணியின் ஸ்கோரையும் 200 ரன்களுக்கு மேல் எடுத்துச் சென்றனர். அதன்பின் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 69 ரன்கள் எடுத்த நிலையில் கேன் வில்லியம்சன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டாம் லேதம் ரன்கள் ஏதுமின்றி அதே ஓவரில் முகமது ஷமியிடம் விக்கெட்டை இழந்தார்.  

Advertisement

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெரில் மிட்செல் தனது சதத்தைப் பதிவுசெய்து அணிக்கு நம்பிக்கைக் கொடுத்தார். அவருடன் இணைந்த கிளென் பிலீப்ஸ் தனது பங்கிற்கு 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 41 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடித்து விளையாடி வந்த டெரில் மிட்செல் 9 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 134 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணியின் தோல்வியும் உறுதியானது. 

ஆனால் அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களால் இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். 

இதன்மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் நான்காவது முறையாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அடுமட்டுமின்றி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News