ஐசிசி உலகக்கோப்பை 2023: பாபர் ஆசாம், சௌத் ஷகில் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 271 டார்கெட்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் பாகிஸ்ஹான் - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் 9 ரன்களிலும், இமாம் உல் ஹக் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து மார்கோ ஜான்சென் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஸ்வான் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அஹ்மத் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் பாபர் ஆசாமும் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 50 ரன்கள் எடுத்த் நிலையில் ஷம்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சௌத் சகீப் - ஷதாப் கான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஷதாப் கான் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் அரைசதம் கடந்த சௌத் ஷகில் 52 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய முகமது நவாஸும் அதிரடியாக விளையாடி தனது பங்கிற்கு 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய முகமது வாசிம் ஜூனியரும் 7 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அபாரமாக பந்துவீசிய தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.