ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஆடவருக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா மற்றும் ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

அதன்படி நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 8 போட்டிகளில் விளையாடி 4.17 என்ற எகனாமியில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், தொடர் நாயகன் விருதையும் வென்றார். அதேபோல் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் 257 ரன்களை குவித்து, இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 

மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 281 ரன்களை குவித்து, இத்தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் பெருமையையும் பெற்றார். இதன் மூலம் இவர்களது பெயர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஜூன் மாதத்தின் சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியலில் பரிந்துரை செய்துள்ளது. இவர்களில் வாக்கெடுப்பின் அடிப்படையில் ஜூன் மாதத்தின் சிறந்த வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் ஜூன் மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்து அணியின் மையா பௌச்சர், இலங்கை அணியின் விஸ்மி குணரத்னே ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து வீராங்கனை மையா பௌச்சர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்களுடன் மூன்று போட்டிகளில் 343 ரன்களைக் குவித்து அசத்தினார். 

இதன்மூலம் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஸ்மிருதி மந்தனாவின் பெயர் இடம்பிடித்துள்ளது. மேலும் இப்பட்டியலில் இலங்கை வீராங்கனை விஷ்மி கருணரத்னேவின் பெயரும் இடம்பிடித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஷ்மி கருணரத்னே அத்தொடரில் மொத்தமாக 192 ரன்களைக் குவித்ததன் மூலம் இப்பட்டியளில் இடம்பிடித்துள்ளார். இவர்களில் வாக்கெடுப்பின் அடிப்படையில் ஜூன் மாதத்தின் சிறந்த வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News