இதனை செய்தால் ரிஷப் பந்த் நிச்சயம் டி20 உலகக்கோப்பை அணியில் இருப்பார் - ஜெய் ஷா!

Updated: Mon, Mar 11 2024 20:31 IST
இதனை செய்தால் ரிஷப் பந்த் நிச்சயம் டி20 உலகக்கோப்பை அணியில் இருப்பார் - ஜெய் ஷா! (Image Source: Google)

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் சென்னை செப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதமாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து இதுவரை கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. 

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பந்த் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்தது. 

இந்நிலையில் தான் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்து விளையாடுவதற்கு  தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். சமீபத்தில் அவருக்கு மேற்கொள்ள பட்ட சோதனையின் முடிவில், ரிஷப் பந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரு பேட்டராக மட்டுமே விளையாட வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

அவர் சமீபத்தில் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை செய்து வந்தாலும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பேட்டராக மட்டும் பயன்படுத்துமாறு என்சிஏ கூறியதாக தகவல் வெளியாகியனது. இந்நிலையில் ரிஷப் பந்தால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் என்றால் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்புள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் பந்த் நன்றாக பேட்டிங் செய்கிறார், நன்றாக விக்கெட் கீப்பிங் செய்கிறார். விரைவில் அவர் முழு ஃபிட்னஸையும் எட்டிவிட்டார் என்று சான்றிதழ் அளிக்கப்படும். இந்திய அணிக்காக ரிஷப் பந்த் டி20 உலகக்கோப்பையில் விளையாடினால், அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். அவர் எங்களுக்கு மிகப்பெரிய சொத்து. ஒருவேளை ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்ய முடிந்தால், நிச்சயம் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார். இதனால் ஐபிஎல் தொடரில் அவர் எவ்வாறு செயல்படுவார் என்பதை பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி ஐபிஎல் தொடரை பொறுத்தே வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படும் நிலையில் ஜெய் ஷாவின் இக்கருத்தானது முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே உலககோப்பை தேர்வுக்கான போட்டியில் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, இஷான் கிஷான் ஆகியோரிடையே கடும் போட்டி உள்ள நிலையில், தற்போது ரிஷப் பந்தும் அந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை