விஜய் ஹசாரே கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் அஸாமை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மகாராஷ்டிரா!

Updated: Wed, Nov 30 2022 19:29 IST
In-form Ruturaj Gaikwad's 162 nullifies Assam threat as Maharashtra reach Vijay Hazare Trophy 2022 f (Image Source: Google)

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதிக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, சௌராஷ்டிரா, அசாம் அணிகள் முன்னேறின. கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகள் மோதிய அரையிறுதி போட்டியில் கர்நாடகாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு  முன்னேறியது.

மற்றொரு அரையிறுதி போட்டியில் மகாராஷ்டிரா - அஸாம் அணிகள் மோதின. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அஸாம் அணி பந்துவீச்சைத்  தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி சதமடித்தார். 

காலிறுதி போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்த ருதுராஜ் கெய்க்வாட், இந்த போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 126 பந்தில் 18 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 168 ரன்களை குவித்தார். அவருடன் இணைந்து அங்கிட் பாவ்னேவும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அங்கித் 110 ரன்களை குவித்தார். ருதுராஜ் மற்றும் அங்கித் ஆகிய இருவரின் அபாரமான சதங்களால் மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 350 ரன்களை குவித்தது.

அதன்பின் 351 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய அசாம் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸாரிகா மற்றும் சாய்க்கியா (10) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ஆம் வரிசையில் களமிறங்கிய ரிஷவ் தாஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரியான் பராக் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

103 ரன்களுக்கே அசாம் அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டபோதிலும், 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷிப்சங்கர் ராய் மற்றும் ஸ்வருபம் ஆகிய இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து, 5ஆவது விக்கெட்டுக்கு 133 ரன்களை குவித்தனர். ஷிப்சங்கர் ராய் 78 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அபாரமாக பேட்டிங் செய்து சதத்தை நெருங்கிய ஸ்வருபம் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து 5 ரன்னில் சதத்தை தவறவிட்டு 45ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

கடைசி வீரர் வரை இலக்கை எட்ட அசாம் அணி கடுமையாக போராடியபோதிலும், அந்த அணியால் 50 ஓவரில் 338 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது. அசாம் அணி கடுமையாக போராடியபோதிலும், 12 ரன்கள் என்ற சிறிய வித்தியாசத்தில் கடைசியில் தோல்வியை தழுவியது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மகாராஷ்டிரா அணி இறுதிப்போட்டியில் சௌராஷ்டிராவை எதிர்கொள்கிறது. டிசம்பர் 2ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் மகாராஷ்டிராவும் சௌராஷ்டிராவும் மோதுகின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை