IND vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 146 ரன்களில் சுருட்டியது இந்தியா!

Updated: Tue, Oct 01 2024 12:27 IST
Image Source: Google

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது மொமினுல் ஹக்கின் அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொமினுல் ஹக் 107 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் ரோஹித் சர்மா 23, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 47, கேஎல் ராகுல் 68 ரன்களைச் சேர்க்க, 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்துள்ள வங்கதேச அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களைச் சேர்த்தது. 

இந்நிலையில் இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தரப்பில் சாத்மான் இஸ்லாம் 7 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் மொமினுல் ஹக் 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஆண்டோவும் 19 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்மான் இஸ்லாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் சாத்மான் இஸ்லாம் 50 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லிட்டன் தாஸ் ஒரு ரன்னிலும் ஷாகிப் அல் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும், மெஹிதி ஹசன் மிராஸ் 9 ரன்களிலும், தைஜுல் இஸ்லாம் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இறுதிவரை களத்தில் இருந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் 37 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.’

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் வங்கதேச அணியானது ஐந்தாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னரே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் காரணமாக இந்திய அணிக்கு 95 ரன்களை வங்கதேச அணியானது இலக்காக நிர்ணயித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை