இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்ததார். இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்கள் யஷஸ்வி ஜெய்வ்ஸால், ஹர்ஷித் ரானா ஆகியோர் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றனர்.

Advertisement

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 5ஆவது ஓவருக்கு பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.  அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பில் சல்ட் 43 ரன்களிலும், பென் டக்கெட் 32 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 111 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் - ஜேக்கப் பெத்தெல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியிலும் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

அதன்பின் 52 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 5 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்திய ஜேக்கப் பெத்தெலும் 51 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஃபார்மின்றி தவித்து வரும் ரோஹித் சர்மாவும் 2 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறப்பான ஆடத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 96 ரன்களை கடந்த நிலையில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷுப்மன் கில்லுடன் இணைந்த அக்ஸர் படேலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

Advertisement

இதன்மூலம் இந்திய அணியின் வெற்றியும் உறுதியான நிலையில், 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 52 ரன்களை எடுத்திருந்த அக்ஸர் படேல் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேஎல் ராகுலும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து இப்போட்டியில் அபாரமாக விளையாடிய வந்த ஷுப்மன் கில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 பவுண்டரிகளுடன் 82 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். இறுதியில் ஹர்திக் பாண்டியா 9 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் இந்திய அணி 39.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் மற்றும் சாகிப் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 09ஆம் தேதி கட்டாக்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News