IND vs NZ, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!

Updated: Fri, Oct 25 2024 11:39 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார். 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் 15 ரன்னிலும், வில் யங் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரான இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தும் அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 76 ரன்களில் பெவிலியன் திரும்ப, ரச்சின் ரவீந்திராவும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் 18 ரன்களுக்கும், டாம் பிளெண்டல் 3 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 9 ரன்களுக்கும், டிம் சௌதீ 5 ரன்களுக்கும், அஜாஸ் படேல் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய மிட்செல் சாண்ட்னரும் 33 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், ஷுப்மன் கில் 10 ரன்களுடனும் தொடர்ந்தனர். இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தலா 30 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னிலும், ரிஷப் பந்த் 18 ரன்னிலும், சர்ஃப்ராஸ் கான் 11 ரன்னிலும், அஸ்வின் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 107 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதில் ஜடேஜா 11 ரன்னிலும், வாஷிங்டன் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை