IND vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட டாம் லேதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!

Updated: Fri, Oct 25 2024 16:48 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார். 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் 15 ரன்னிலும், வில் யங் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரான இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தும் அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 76 ரன்களில் பெவிலியன் திரும்ப, ரச்சின் ரவீந்திராவும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் 18 ரன்களுக்கும், டாம் பிளெண்டல் 3 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 9 ரன்களுக்கும், டிம் சௌதீ 5 ரன்களுக்கும், அஜாஸ் படேல் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய மிட்செல் சாண்ட்னரும் 33 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தலா 30 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய விராட் கோலி, ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், அஸ்வின் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன் பின்னர் இணைந்த ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஆகாஷ் தீப்பும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார்.  இறுதியில் வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அடுத்தடுத்து விளாசிய நிலையில், மறுபக்கம் ஜஸ்பிரித் பும்ரா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் சாண்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - டாம் லேதம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவான் கான்வே 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வில் யங் 23 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 9 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அதேசமயம் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய டாம் லேதம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செலும் 18 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடி வந்த டாம் லேதம் 10 பவுண்டரிகளுடன் 86 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் இணைந்த டாம் பிளண்டல் - கிளென் பிலீப்ஸ் இணையும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பிளெண்டன் 30 ரன்னுடனும், பிலீப்ஸ் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை