IND vs SA, 2nd T20I: மில்லர், டி காக் போராட்டம் வீண்; தொடரை வென்றது இந்தியா!

Updated: Sun, Oct 02 2022 23:13 IST
IND vs SA, 2nd T20I: Miller, de Kock’s knocks in vain; India won the series! (Image Source: Google)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டி20 போட்டி இன்று கவுஹாத்தியில் நடக்கிறது. 

இதுவரை இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றிராத இந்திய அணி, முதல் முறையாக டி20 தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங்  செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் - ராகுல் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அடித்து ஆட பவர்ப்ளேயில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்களை குவித்தது. 37 பந்தில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. ஆனால் அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். 28 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்க பவுலிங்கை தெறிக்கவிட்டார். ரபாடா வீசிய 15வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்தார். அதிரடியாக ஆடி 18 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், 22 பந்தில் 61 ரன்களை குவித்து ரன் அவுட்டானார்.

அதிரடியாக ஆடிய விராட் கோலி 28 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 49 ரன்களை விளாச, தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி சிறப்பாக முடித்து கொடுத்தார். தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர், ஃபினிஷர் என அனைவருமே தங்களது ரோலை செவ்வனே செய்ய, 20 ஓவரில் 237 ரன்களை குவித்த இந்திய அணி, 238 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டெம்பா பவுமா, தீபக் சஹார் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன்னை கூட எடுக்காமல் மெய்டனாக்கினார். அதன்பின் இந்திய அணி தரப்பில் இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்து டெம்பா பவுமா மற்றும் ரிலே ரொஸ்ஸோவ் ஆகியோரை டக் அவுட்டாகி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த குவின்டன் டி காக் - ஐடன் மார்க்ரம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறுசிறுக ஸ்கோரை உயர்த்தினர். இதில் மார்க்ரம் 19 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்த நிலையில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் - டி காக் இணை ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும், ஓவர்கள் செல்ல செல்ல அதிரடி ஆட்டத்தில் மிரட்டி ஆட்டத்தின் பரப்பரப்பை கூட்டியது. இதில் அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்த, பார்ட்னர்ஷிப் முறையில் இருவரும் 100 ரன்களையும் சேர்த்தனர். 
 
இதில் தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதம் விளாசி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். ஆனாலும் தென அப்பிரிக்க அணியால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 106 ரன்களையும், குவிண்டன் டி காக் 69 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை