IND vs SL, 1st ODI: ஷன்காவின் சதம் வீண்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

Updated: Tue, Jan 10 2023 21:25 IST
IND vs SL, 1st ODI: A fighting hundred from Dasun Shanaka, but India wrap up a comfortable win! (Image Source: Google)

இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கௌகாத்தியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் செய்து இருவருமே அரைசதம் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 19.4 ஓவரில் 143 ரன்களை குவித்து கொடுத்தனர். அதன்பின் கில் 70 ரன்களுக்கும், அவரைத்தொடர்ந்து ரோஹித் 83 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் 28, கேஎல் ராகுல் 39 ஆகியோர் சிறிய பங்களிப்பு செய்து ஆட்டமிழந்தனர். அவர்கள் ஆட்டமிழந்தாலும், 3ஆம் வரிசையில் இறங்கி நிலைத்து நின்று அபாரமாக விளையாடிய விராட் கோலி சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 45ஆவது சதத்தை விளாசி சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கும் நிலையில், கோலி 45ஆவது சதத்தை விளாசியுள்ளார். இன்னும் 5 சதங்கள் அடித்தால் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பதால் இந்த ஆண்டே அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

அதன்பின் விராட் கோலி 87 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்களை குவித்து, 374 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்தது. இலங்கை அணி தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த சரித் அசலங்காவும் 23 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் பதும் நிஷங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்த தனஞ்செய டி சில்வாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இதில் நிஷங்கா தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார்.

மறுமுனையில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தனஞ்செய டி சில்வா 47 ரன்களில் ஆட்டமிழக்க, 72 ரன்களைச் சேர்த்திருந்த பதும் நிஷங்காவும் உம்ரான் மாலிக்கிடம் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் தசுன் ஷனகா ஒருமுனையில் வழக்கம்போல் அதிரடியாக விளையாட மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.

இருப்பினும் இறுதிவரை போராடிய தசுன் ஷனகா 87 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருப்பினும் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 108 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையையும் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை