இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. இது விராட் கோலியில் 100வது சர்வதேச டெஸ்ட் ஆகும்.
எஞ்சிய போட்டிகளை வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இதனால் வெற்றியுடன் தொடரை தொடங்கும் உத்வேகத்துடன் இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இலங்கை தொடரில் இடம்பெறவில்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முதல் முறையாக இவ்விருவரும் இல்லாமல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. கே.எல். ராகுலும் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் 3 இடங்கள் காலியாக உள்ளதால் அதற்கு 4 வீரர்கள் போட்டி போடுகின்றனர்
ரோகித்துடன் தொடக்க வீரராக களமிறங்கும் சுப்மான் கில், காயத்திலிருந்து குணமடைந்துவிட்டார். எனினும் அவரை நடுவரிசையில் களமிறக்கி, நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட மாயங் அகர்வால் ஓபனிங் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது. இதே போன்று புஜாரா இடத்தில், அவரை போலவே பொறுமையாக விளையாடும் ஹனுமா விஹாரி களமிறங்கலாம்.
5வது வீரராக ரஹானே இடத்தில், இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுப்மான் கில் எந்த இடத்தில் விளையாடுவார், இல்லை அணியிலிருந்த நீக்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
ஆடுகளத்தை பொறுத்த வரை முதல் 2 நாட்கள் பேட்டிங்கிற்கு சாதகமாகவும், பின்னர் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். இதனால் இப்போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.