வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் இந்தத் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் இந்திய அணி விளையாடி வருகின்றது. 

Advertisement

போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இருக்கும் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 308/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாகவும் அற்புதமாகவும் பேட்டிங் செய்த கேப்டன் ஷிகர் தவான் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 97 (99) ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அவருடன் பேட்டிங் செய்த இளம் வீரர் சுப்மன் கில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (53) ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 54 (57) ரன்களும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் சாரிபில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மோட்டி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Advertisement

அதை தொடர்ந்து 309 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 75 (68) ரன்கள் சமர் ப்ரூக்ஸ் 46 (61) ரன்களும் பிரண்டன் கிங் 54 (66) ரன்கள் குவித்து வெற்றிக்காகப் போராடி ஆட்டமிழந்தனர். இருப்பினும் சீரான இடைவெளிகளில் இந்தியா விக்கெட்டுகள் எடுத்த நிலையில் கடைசியில் அகில் ஹொசைன் 32* (32) ரன்களும் ரோமரியா செபார்ட் 39* (25) ரன்களும் எடுத்து போராடிய போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 305/6 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி கடுமையாக போராடி கடைசி பந்தில் பரிதாபமாக தோல்வியாடைந்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சிராஜ், தாகூர், சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2ஆவது போட்டி இன்று ஜூலை 24இல் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு அதே குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்றால் தான் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்ற குறிக்கோளுடன் வெஸ்ட் இண்டீஸ் கடுமையாக போராட உள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்டதைப்போல் 2ஆவது போட்டியிலும் கச்சிதமாக செயல்பட்டு தொடரை முன்கூட்டியே கைப்பற்ற இந்தியாவும் போராட உள்ளது.

முன்னதாக முதல் போட்டியில் சதத்தை தவற விட்டாலும் 97 ரன்கள் குவித்து மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக 36 வயதில் அரைசதம் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிக வயதில் அரைசதம் அடித்த இந்திய கேப்டன் என்ற தோனி, சுனில் கவாஸ்கர், அசாருதீன் ஆகியோரின் ஆல்-டைம் சாதனைகளை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். 

  • ஷிகர் தவான் : 36 வருடம் 229 நாட்கள், 2022*
  • முகமது அசாருதீன் : 36 வருடம் 120 நாட்கள், 1999
  • சுனில் கவாஸ்கர் : 35 வருடம் 225 நாட்கள், 1985
  • எம்எஸ் தோனி : 35 வருடம் 108 நாட்கள், 2016
  • ரோஹித் சர்மா : 35 வருடம் 73 நாட்கள், 2022

இதுபோக ஆட்டநாயகன் விருதையும் வென்ற காரணத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய கேப்டன் என்ற முகமது அசாருதீன் ஆல்-டைம் சாதனையையும் முறியடித்தார். இதற்கு முன் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தனது 35 வயது 271 நாட்களில் ஆட்டநாயகன் விருது வென்றதே முந்தைய சாதனையாக இருந்தது.

Advertisement

கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் முடிந்தளவு சிறப்பாக செயல்படும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் நான் சோடை போகவில்லை என்று நிரூபித்துக் கொண்டே வருவதால் 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News